கோவை மாவட்டத்தில் தாய்த்தமிழ்ப்பள்ளிகள்

-கு.ந.தங்கராசு

“மெல்லத் தமிழ் இனி வாழும்” என்ற நம்பிக்கையைத் தமிழ் மண்ணில் விதைத்தவை தாய்த்தமிழ்ப் பள்ளிகள் !

“குழந்தை, அறிவாற்றலில் செழித்து உயர அனைத்துக் கல்வியும் தாய்மொழி மூலமே கற்றுத் தரப்பட வேண்டும். விளையாடி மகிழும் குழந்தையின் உணர்வைச் சிதைக்காமல், குழந்தைக்குக் கல்வியை ஊட்ட வேண்டும். ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்பிக்கலாம். ஆனால், தாய்மொழியைக் கற்பிக்கும் முறை வேறு; அயல்மொழியைக் கற்பிக்கும் வேறு. கற்பித்தல் நெறிமுறைகளில் புதிய புதிய உத்திகளைக் கையாள வேண்டும்.”

ஆழமான கல்விப் பார்வையுடன், 1993இல் சென்னையை அடுத்த அம்பத்தூரில் முதல் தாய்த்தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டது. இன்று தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட தாய்த்தமிழ்ப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன.

கோவை மாவட்டத்தில் திருப்பூர், கோபி, உடுமலை, பொள்ளாச்சி, பல்லடம், சத்தி, சூலூர் முதலிய இடங்களில் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன.

திருப்பூர் தாய்த்தமிழ்ப்பள்ளிகள் ஆங்கிலவழிப் பள்ளிகளுக்கு இணையான அளவில் வளர்ச்சியடைந்துள்ளன.

தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் ப்ரீகேஜியை, ‘அரும்புகள்’ என்றும் எல்கேஜியை மொட்டுகள் என்றும் யுகேஜியை மலர்கல் என்றும் அழகுத்தமிழில் பெயரிட்டு அழைக்கின்றனர்.

எழுத்தர்களை உருவாக்கும் மெக்காலே கல்விமுறைக்கு இது ஒரு மாற்றுக்கல்வி முறையாக விளங்குகிறது. எழுத்தறிவித்தல், எண்ணறிவித்தல், சிந்தனையைத் தூண்டுதல், கலையுணர்ச்சியை வளர்த்தெடுத்தல், படைப்புத்திறனை வளர்த்தல், புத்தக வாசிப்பின்மேல் ஆர்வத்தை ஏற்படுத்துதல் எனப் பல கோணங்களில் கல்வித்திட்டம் உருவாக்கப்பட்டு நடை முறைப்படுத்தப்பட்டது.

ஒவ்வோர் ஆசிரியர்க்கும் ஒவ்வொரு குழந்தையும் செல்லக் குழந்தையாகத் திகழ்வதை இங்கே காண முடியும்.

குழந்தைகள் கல்வியில் மட்டுமின்றி, ஆடல் பாடல் கலைகளிலும் வல்லுநர்களாக வளர்கிறார்கள்.

குழந்தைக்கல்வி வல்லுநர் சலாலுதீன், தியாகு, நசன், தமிழ்க்குரிசில், ந.முத்துக்குமரன், கு.ந.தங்கராசு போன்றோர் பாடத்திட்டங்களையும் விளையாட்டு வழிக் கல்விமுறையையும் முதலில் வடிவமைத்துள்ளார்கள். இன்று அரசுப்பாடதிட்டமும், தாய்த்தமிழ்த் துணைப்பாடத்திட்டமும் இங்கே பின்பற்றப்படுகின்றன.

தாய்த்தமிழ்ப் பள்ளியென்றாலும், தமிழுடன் ஆங்கிலமும் கற்பிக்கப்படுகிறது. கற்பித்தல் முறை இங்கு மிக எளிமையாக உள்ளது. தாய்த்தமிழ்ப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன், நான்காம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்திலுள்ள அனைத்து ஆங்கிலச் சொற்களுக்கும் பொருள் தெரிந்துள்ளான். ஒவ்வொரு வகுப்பு ஆங்கிலப் பாடநூலில் உள்ள சொற்களை அகர வரிசையில் தொகுத்து, ஒரு தனி அகராதி (dictionary) யாக வெளியிட்டிருக்கிறார்கள். சிந்தனையை வளர்ப்பதையும் நினைவாற்றலை வளர்ப்பதையும் சீராகக் கொண்டு செல்கிறார்கள்.

இப்பள்ளிகளில் ஒரு வியப்பு, குழந்தைகளை ஆசிரியர்கள் மதிப்புச் சொற்களால் அழைக்கிறார்கள். பிரம்பையும் அட்யையும் இங்கு காணவே முடியாது. குழந்தைகள் எப்போதும் கைகட்டுவதில்லை. பார்வையிட வருவோர், பெரியவர்கல் யாரேனும் கைகட்டி நின்றால், குழந்தைகள் “கைகளைக் கட்டாதீர்கள்” என்று ஒரே குரலில் வேண்டுகிறார்கள். பெரியவர்களைப் பார்க்கும்போது, “காலை வணக்கம். வெற்றி உறுதி” என்று சொல்லி வியக்க வைக்கிறார்கள்.

அறிஞர்களின், தேசங்களின் வரலாறு நயம்படக் கற்பிக்கப்படுவதால், தாய்த்தமிழ்ப் பள்ளிக் குழந்தைகள் வரலாற்றுணர்வு நிரம்பியவர்களாக உள்ளனர்.

மண்ணின் மீது நேசம், மக்கள் மீது நேசம், இயற்கைச் செல்வங்கள் மீது நேசம், மொழியின் மீது சேசம், சொந்தப் பண்பாட்டின்மீது நேசம், குழந்தைகள் உள்ளங்களில் ஆழப்பதியவைக்கப்படுவதால், இங்கு பயிலும் குழந்தைகள் பண்பாடுமிக்கவர்களாக வளர்கிறார்கள். அதே சமயம் மன உறுதியும் துணிவும் உள்ளவர்கள் பெறுவதற்கான பயிற்சிகளும் இங்கே அளிக்கப்படுகின்றன.

காலத்துக்கேற்ப, அடிப்படைக் கணினிக் கல்வி, கணினிப் பயன்பாடு முதலியனவும் கற்பிக்கப்படுகின்றன.

தமிழாக இருப்பினும், ஆங்கிலமாக இருப்பினும் பிழையின்றிக் கற்பிக்கிறார்கள்; பிழையற மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். தூய்மை, நேரந்தவறாமை, ஒழுங்கு, நட்புணர்வு எல்லாவற்றையும் இங்கே குழந்தைகள் “கல்விக் கூடமல்ல; கலைக்கூடம்” என அறிஞர்கள் பலரும் பாராட்டிச் செல்கிறார்கள்.

நெஞ்சு நிமிர நிற்கும் பிஞ்சுக் குழந்தைகளின் பின்வரும் முழக்கம் நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.

. அன்னை மொழியில் அனைத்தும் கற்போம் !
. வேண்டிய மொழியை விரைந்து கற்போம் !
. அறிவியல் உலகை அறிவால் வெல்வோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக