அன்புள்ள ஆசிரியருக்கு ஆபிரகாம்லிங்கன்

(ஆபிரகாம்லிங்கன் தனது மகனைப் பள்ளிக்கு அனுப்பிய போது ஆசிரியருக்கு எழுதியது)

அன்புள்ள ஆசிரியருக்கு,

எனது மகன் இன்று தன் பள்ளிப் படிப்படித் தொடங்குகிறான். கொஞ்ச காலத்திற்கு அவனது பள்ளிப்படிப்பு அவனுக்குப் புதிராக இருக்கப்போகிறது. ஆதலால் அவனைப் பரிவோடு நடத்துவீர்கள் என நம்புகிறேன்.

எல்லா மனிதர்களும் நீதியானவர்களல்ல. நேர்மையானவர்களல்ல என்ற உண்மையையும், ஒவ்வொரு கயவனும் ஒரு வீரனை முன்மாதிரியாய்க் கொண்டுள்ளான் என்றும் ஒவ்வொரு ஒழுங்கு கெட்ட அரசியல்வாதியும் ஒரு தன்னலமற்ற தலைவனை முன்மாதிரியாகக் கொண்டுள்ளான் என்பதையும், ஒவ்வொரு பகைவனுக்கும் கூட ஒரு நண்பன் இருக்கிறான் என்ற உண்மையைக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமைப் படுவதிலிருந்து அவனைத் திசை திருப்புங்கள். முடிந்தால் அமைதியாக தனக்குள்ளேயே சிரித்துக் கொள்வதன் இரகசியத்தையும் வலிமையற்றவர்களைக் கொடுமைப்படுத்தி அவர்கள் மீது வெற்றி கொண்டு விட்டோம் என எண்ணுபவர்களே உண்மையில் தோல்வியைத் தழுவுகிறார்கள் என்பதையும், முடிந்தால் புத்தகம் படிப்பதன் அவசியத்தையும், வானத்துப் பறவைகள் பற்றிய புரிந்து கொள்ள முடியா உண்மைகளைப் பற்றியும், இயற்கை எழில் பொங்கும் பச்சை மலைகளின் மீது வளர்ந்துள்ள வண்ண மலர்களைப் பற்றியும் ஆழமாக தியானிக்கக் கற்றுக் கொடுங்கள்.

ஏமாற்றுவதைவிட தோல்வியடைவது எவ்வளவோ மேன்மையானது என்பதையும், எல்லாரும் தவறு என்று சொல்லும்போதும் தன்னுள்ளத்தில் இயல்பாக எழும் சிந்தகைள் மீது உறுதியான நம்பிக்கையும், எளியோரிடம் எளிமையாகவும், பரிவோடும், வலியோருடன் வன்மையாகவும் இருக்க அவனுக்கும் கற்றுத் தாருங்கள்.

எல்லோரும் செய்வது போல் கூட்டத்தைப் பின்பற்றாமலிருக்கத் தேவையான வலிமையையும், எல்லோரும் சொல்வதைக் கேட்கவும் ஆனால் கேட்பதை உண்மை என்ற சல்லடையில் வடிகட்டி நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளவும் கற்றுக் கொடுங்கள்.

முடிந்தால் தான் வருத்தமாக இருக்கும் போதும் எப்படி சிரித்துக் கொள்வது எனவும், அழுவதில் வெட்கப்பட எதுவும் இல்லை என்பதையும், தோல்வியிலும் மகத்துவமுள்ளது, வெற்றியிலும் துயரமுள்ளது என்பதையும், எப்போதும் குறைகூறிக் கொண்டே இருப்பவர்களை ஏளனப்படுத்தவும் கற்றுக் கொடுங்கள்.

அவனது திறமைகளை அதிக விலைக்கு விற்கவும் அதே நேரத்தில் அவனது இதயத்துக்கும் ஆன்மாவுக்கும் விலை நிர்ணயிக்காமலிருக்கவும், ஊளையிடும் கூட்டத்தின் முன் தன் காதுகளை மூடிக்கொள்ளவும், தான் செய்வது சரி என்று பட்டால் அவர்களை எதிர்த்து நின்று மோதவும் கற்றுக் கொடுங்கள்.

பொறுமையிழந்து துடிப்பாக வாழத் தேவையான துணிவை அவன் பெறட்டும் எப்போதும் தன்மீது நம்பிக்கை கொள்ளக் கற்றுக் கொடுங்கள். அப்போதுதான் அவன் மனித குலத்தின் மீதும் கடவுளின் மீதும் மேலான நம்பிக்கை கொண்டிருப்பான். இது ஒரு மிகப்பெரிய கட்டளை. ஆனால் உங்களால் இயன்றதைச் செய்யுங்கள். அவன் மிகவும் நல்ல சிறுவன். அவன் என் மகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக